இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அழகிய தீவு அடங்கிய பிச்சாவரம் சுரபுண்ணை காடுகள்!  படகு சவாரி செய்து ரசிக்கலாம் வாங்க!

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை,  கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்திற்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் சிதம்பரம்

News image
Updated On :23 ஏப்ரல் 2013, 1:04 pm

G.Sundararaj

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது. விடுமுறையை கழிக்க கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் மற்றும் எம்.ஜி.ஆர் திட்டு என்கிற தீவினை படகில் சென்று சுற்றிப்பார்த்து மகிழலாம்.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை,  கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்திற்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் சிதம்பரம் நகருக்கு வரும் புறவழிச்சாலையில் வழியாக வந்து பாதியில் பிரியும் கிள்ளை செல்லும் சாலையின் வழியாக பிச்சாவரத்திற்கு செல்லலாம்.பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீட்டர். மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகள் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில்  சுமார் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டு தோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.  மேலும் கடற்கரையோரம் எம்ஜிஆர் திட்டு,  சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.2004  டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையில் போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பெரும்பாலோர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவிற்கு எம்ஜிஆர் திட்டு என பெயர் சூட்டப்பட்டது. தற்போது எம்ஜிஆர் திட்டு தீவில் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திரரத்னூ முயற்சியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சூரியஉதய நிகழ்ச்சியுடன் விடியல்விழா ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படுகிறது.  2004-ம் ஆண்டு முதன்முதலாக சிதம்பரம் உதவிஆட்சியராக ராஜேந்திரரத்னூ இருந்த போது தொடங்கினார். அதன் பிறகு ராஜேந்திரரத்னூ முதன்முறையாக கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற போது 2008-ம் ஆண்டு விடியல் விழா நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2011-ல் பொறுப்பேற்ற கடலூர் மாவட்ட ஆட்சியராக ராஜேந்திரரத்னூ சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மார்ச் மாதம் விடியல் விழாவை  நடத்தினார்.  தற்போது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் விடியல்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மருத்துவ குணம் கொண்ட தில்லைமரம்:  பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தில்லை மரம் மருத்துவக்குணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும். தனது தொழுநோய் குணமடைய வேண்டி் முதலாம் பராந்தக சோழகன் தில்லை நடராஜரை வேண்டி இங்கு வந்து தங்கி 45 நாட்கள் முனிவர் ஒருவரிடம் தில்லை மூலிகை தாவரத்தை மூலம் சிகிச்சை பெற்று அந்நோய் குணமடைந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் சுரபுண்ணை செடி புற்றுநோய் மற்றும் கொடி நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையம் சோதனை மூலம் கண்டறிந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

படகுசவாரி: பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுகுழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. படகுகுழாமில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம் துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200  கட்டணமும், மோட்டார் படகில் இரண்டு மணி நேரத்திற்கு 8 பேர் பயணம் செய்ய ரூ.2100 வசூலிக்கப்படுகிறது.   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுசவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள்:  பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் உதயகுமார் தொலைபேசி எண்: 04144-249249. சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739; கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-249227. வெப்சைட் முகவரி: www.killai.com.

தங்கும் விடுதி மற்றும் உணவகம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனம் உணவகம் மற்றும் பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறந்துள்ளது. மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை (Confrance HALL) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கி சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார். பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.